ஓட்டு போடறது எப்படி… விரைவில் வாக்காளர்களுக்கு பயிற்சி
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 5463 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. பயன்பாட்டில் 19,117 மெசின்கள் வைக்கப்பட்டது. இவை அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 300 ஓட்டு மெசின்களை பயிற்சிக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இவை ஒப்படைக்கப்படும்.
ஒரு தொகுதிக்கு 25 முதல் 30 மெசின்கள் பயிற்சிக்காக தரப்படும். பொது இடங்களில் வைத்து ஓட்டு போட அதிகாரிகள் பயிற்சி தருவார்கள். பட்டனை அழுத்துவது, விவி பேட் கருவியில் சின்னம் வருகிறதா என பார்ப்பது, பீப் சத்தம் கேட்கிறதா, கவுண்டிங் மெசின் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்காளர்கள் பார்க்க முடியும்.
பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட், முக்கிய இடங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஓட்டு மெசின்களை பயிற்சிக்காக வைத்து ‘டெமோ’காட்டவுள்ளனர். ஒரு மாத காலத்திற்கு மக்கள் ஓட்டு போட பயிற்சி தரப்படும். அதன் பின்னர் தேர்தல் பிரிவில் இந்த மெசின்கள் ஒப்படைக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
