கோமாரியில் 30 ஆடுகள் செத்துப் போச்சு.. கோவை கலெக்டர் ஆபீசில் தொழிலாளி கண்ணீர் புகார்..!
கோமாரியில் 30 ஆடுகள் செத்து நான்கு ஆண்டுகளாக உதவி வழங்காமல் ஏமாற்றுவதாக கோவை கலெக்டர் ஆபீஸில் தொழிலாளி ஒருவர் இன்று கண்ணீருடன் புகார் அளித்தார்.
கோவை
தொண்டாமுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலன். 65 வயதான இவர் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கொரோனா நோய் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இவரது ஆடுகளுக்கு கோமாரி என்ற வாய் சப்பை நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதில் இவர் பட்டியில் அடைத்து வைத்திருந்த 30 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனால் அவர் அதிர்ச்சி இருந்தார் . இது தொடர்பாக அவர் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தார் .
தனது ஆடுகளுக்கு கொரோனா நோய் காரணமாக கோமாரி தடுப்பூசி போடப்படவில்லை. நோய் தாக்குதலில் மொத்தமாக ஆடுகள் இறந்து விட்டன. இந்த ஆடுகளால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். ஆடுகள் வாங்கினால் தான் என்னால் வாழ முடியும். இல்லாவிட்டால் வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாது என அவர் தெரிவித்திருந்தார். கோவை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் மூன்று கலெக்டர்கள் மாறிய பிறகும் அவருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் 2 லட்ச ரூபாய்க்கு மேல் உதவித்தொகை வழங்குவதாக கூறியிருந்தது.
ஆனால் இதுவரை உதவி தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பாலன் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தார் . அப்போது அவரிடம் விரைவில் வழங்குவதாக வழக்கம் போல் பதில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாலன் கூறுகையில்,” நான் புகார் மனு கொடுத்து விரக்தி அடைந்து விட்டேன். எனது ஆடுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் இறந்த போட்டோ மற்றும் ஆதாரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தேன்.
ஆனால் அதிகாரிகள் உதவி செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். எனது வாழ்வாதாரம் அனைத்தும் போய்விட்டது. மிகவும் வறுமை நிலையில் இருக்கிறேன். ஆடுகளை நம்பி தான் என் வாழ்க்கை இருந்தது. மொத்தமாக ஆடுகள் இறந்து விட்டதால் என்னால் இந்த தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் எனதெரிவித்தார்.
