கோவைக்கு துணை ராணுவ படை : 10ம் தேதி வருகை
கோவை மாவட்டத்தில் குலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு வடக்கு, தொண்டாமுத்தூர். மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.
இதில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் கோவைக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியாற்றவுள்ளனர்.
ஆயுதப்படை அதிரடிப்படை போலீசாரும் பணியில் ஈடுபடவுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் போலீசார் குறிப்பாக துணை ராணுவ படையான சிஆர்பிஎப் போலீசார் வரவழைக்கப்படவுள்ளனர். இவர்கள் வரும் 10ம் தேதி கோவைக்கு வரவுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோவை நகரில் 3 கம்பெனி துணை ராணுவ, படையும், புறநகரில் 5 கம்பெனி போலீசாரும் பணியாற்றினர். இந்த முறை கூடுதலாக 2 முதல் 3 கம்பெனி துணை ராணுவ படையினர் தேவை என கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர் .
ஒரு கம்பெனி படையில் 60 பேர் இடம்பெறுவர். கோவை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையில் இருந்து 500 முதல் 600 பேர் வரவழைக்கப்படவுள்ளனர். இவர்கள் கோவையில் பறக்கும் படை மற்றும் சென்சிடிவ் ஏரியாக்களில் துப்பாக்கியுடன் பணியில் ஈடுபடவுள்ளனர்.
