கோவையில் கல்லுக்குழி நீரில் மூழ்கிய சிறுவன் சாவு
கோவை மதுக்கரை மலை சாமி கோயில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் . தொழிலாளியான இவர் மகன் சிவசங்கர் (15 ) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் . நேற்று இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பாலத்துறை பகுதியில் உள்ள ஒரு கல்லுக்குழியில் நீரில் குளிக்க சென்றார் .
அப்போது அவர் ஆழமான பகுதியில் நீச்சல் அடிக்க சென்றதாக தெரிகிறது. சரியாக நீச்சல் தெரியாத இவர் நீண்ட தூரம் சென்று பாறையை தொட்டுவிட்டு மீண்டும் திரும்பி வருவதாக சக நண்பர்களிடம் கூறி சென்றார்.
சிறிது தூரம் சென்றவர் அதற்குப் பிறகு நீச்சல் அடிக்க முடியாமல் திணறியுள்ளார். நண்பர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் நீச்சல் தெரியாத நிலையில் அங்கே செல்லவில்லை. சிறிது நேரம் தத்தளித்த சிவசங்கர் நீரில் மூழ்கி விட்டார்.
இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மூழ்கிய சிவசங்கரை தேடினர் . ஆனால் அவரது சடலம் கிடைக்கவில்லை.
இன்று இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடந்தது . இதில் மூழ்கிய சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வருகின்றனர்.
