கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: 1.15 கோடி ரூபாய் பறித்த கும்பல்..!
கோவை நகர் பகுதியை சேர்ந்த 69 வயதான சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூதாட்டில் தனது வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்தது.
அதில் மூதாட்டி பேசியபோது எதிர் முனையில் பேசிய நபர் மத்திய போலீஸ் சீருடையில் இருந்தார். அப்போது அவர் மும்பையில் இருந்து பேசுவதாகவும் விமானத்துறை மோசடி தொடர்பான வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
நாங்கள் முதல் கட்ட விசாரணையை நடத்தி சிபிஐ வசம் ஒப்படைத்து விடுவோம் நீங்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உங்களுக்கு வயதாகி விட்டதால் கைது செய்து அழைத்து செல்லவில்லை. இருப்பினும் விசாரணைக்கு பின்னர் உங்களை கைது செய்து விடுவோம்.
மேலும் நாங்கள் விசாரித்த விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது என கூறியுள்ளனர். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இருக்கிறோம். தினமும் எங்களது விசாரணைக்கு வீடியோ கால் மூலமாக நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என தெரிவித்தனர் இதை நம்பி அந்த மூதாட்டி தினமும் விசாரணைக்கு ஆஜராகி வந்தார் ஒரு வாரம் இந்த விசாரணை நடந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உங்களை நிரூபிக்க 19 லட்சம் ரூபாய் டெபாசி தொகை செலுத்த வேண்டும்.
இது திரும்ப தரப்படும் என கேட்டுள்ளனர். இதைக் கேட்ட மூதாட்டி அவர்கள் கேட்ட வங்கி கணக்கில் அந்த பணத்தை அனுப்பினார். பணம் பெற்ற பின்னர் அவர்கள் பேசவில்லை. பணம் திரும்ப வராத நிலையில் சந்தேகம் அடைந்த மூதாட்டி இது தொடர் பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் கோவை நகரை சேர்ந்த 80 வயதான டாக்டர் ஒருவர் விமானத்துறை மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி அதே கும்பல் டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாக மிரட்டி 31.50 லட்சம் ரூபாயை பறித்தது.
இந்த டிஜிட்டல் மோசடி விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பல் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கோவையை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் டிரேடிங் செயலியை பயன்படுத்தி வந்தார் .இவர் இரண்டு செயலி மூலம் 41 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தார். இதற்கு அவருக்கு கூடுதல் தொகையுடன் டெபாசிட் கிடைக்கும் என எதிர்பார்த்தார் .
ஆனால் அவர் ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார். இதேபோல் கோவை நகரை சேர்ந்த 35 வயதான ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவரும் டிரேடிங் ஆப் மூலமாக 10 லட்ச ரூபாயும், 27 வயதான இளம் பெண் ஒருவர் 6.89 லட்ச ரூபாயும் டிரேடிங் செயலியில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தனர்.
இது தொடர்பாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாளில் டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் டிரேடிங் ஆப் மூலமாக 1.15 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது.
