கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு..!
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு (பைல் படம்)
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இமெயில் இன்று மதியம் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும் பதறிப்போன பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்று தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர்.
கடந்த சில மாதங்களாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் இதர அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்த நீதிமன்றம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக தொடர்ந்து மிரட்டல் இமெயில் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த வகையில் தற்போது அதே வகையான இமெயில் மிரட்டல் வந்திருப்பதால் போலீசார் தவிப்படைந்துள்ளனர். இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
