கோவையில் பள்ளி சீருடைகள் தைப்பதில் பல லட்ச ரூபாய் மோசடி..! கலெக்டரிடம் புகார்
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு குவிந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள்..
கோவை பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டுறவு குடிசை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை ஏடிடி காலனி, ராமநாதபுரம், மதுக்கரை மற்றும் காரமடை ஆகிய இடங்களில் சங்கத்தின் கிளை உள்ளது. இந்த சங்கத்தில் 500 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் தற்போது 100 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசிடமிருந்து பள்ளி சீருடை தைக்க துணிகள் சங்கத்திடம் வழங்கப்பட்டு அதனை நாங்கள் தைத்து கொடுத்தால் எங்களுக்கு கூலி கொடுக்கப்படும்.
ஆனால் இந்த சங்கத்தின் சிறப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் அன்னபூரணி, காஞ்சனா தேவி, வித்யா, ரேணுகா தேவி ஆகியோர் எங்களுக்கு ஆர்டர் கொடுக்காமல், அவர்களது உறவினர்களான சவிதா, வளர்மதி, காஞ்சனா தேவி, ராஜாத்தி, அலமேலு, தனலட்சுமி ஆகியோருக்கு மட்டுமே அதிகளவிலான ஆர்டர்களை கொடுக்கின்றனர்.
இதனால் நாங்கள் ஆர்டர் இல்லாமல் பாதிப்படைந்து வருகிறோம். மேலும் எங்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் அரசிடம் போலி கணக்கு காட்டி மோசடி செய்து வருகின்றனர்.
நாங்கள் வாங்கும் கூலியில் 25 சதவீதம் மிரட்டி பெற்று கொள்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை. கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். எனவே அம்பிகா, மூத்த அதிகாரிகள் நடராஜ், சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் வித்யா, ரேணுகா தேவி, காஞ்சனா தேவி மற்றும் அன்னபூரணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
கலெக்டரை சந்தித்து இந்த புகார் தொடர்பாக பெண்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட கலெக்டர் பவன் குமார் விரைவில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சாந்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் கூறுகையில்,” பள்ளி சீருடைகள் தயாரிப்பு பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குறிப்பாக வயதான மற்றும் கணவரை இழந்த குடும்ப உதவி இல்லாத பெண்கள் துணி தைத்து வழங்கி வருகிறார்கள். ஆதரவற்ற பின்பு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டு வருகிறது.
பல லட்ச ரூபாய் கமிஷன் தொகை பெற்று வருகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து துணி தைத்து வழங்கும் பெண்களுக்கு முறையான கூலி வழங்குவதில்லை. பல பெண்கள் இந்த மோசடி அதிகாரிகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் சென்று விட்டார்கள்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினால் இதன் பின்னணியில் உள்ள மோசடி மற்றும் ஏமாற்றப்பட்ட தொகை விவரங்கள் முழுமையாக தெரியவரும். இதை இப்படியே விட்டால் தொடர்ந்து இதைவிட பெரும் மோசடி நடத்தி விடுவார்கள்,” என்றனர்.
