கோவையில் மாணவர் அறைகளில் ரெய்டு: கஞ்சா, மெத்தபெட்டமைன் சிக்கியது

செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பொருட்கள் டிஸ்ப்ளே..

கோவை மாவட்டத்தில் மதுக்கரை செட்டிபாளையம், எட்டிமடை மலுமிச்சம்பட்டி ,ஒத்தக்கால் மண்டபம், சூலூர் , நீலாம்பூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

CASO(cardon and search operation) என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் 4.5 கிலோ கஞ்சா 10 கிராம் மெத்தபெட்டமின் , 2.5 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் அரை கிலோ கஞ்சா ஆயில் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நம்பர் பிளேட் இல்லாத 22 வாகனங்கள் , 10 செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் ஒடிசா பீகார் மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக கஞ்சா பொட்டலங்கள் சிந்தடிக் போதை பொருட்கள் கோவைக்கு கடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில் ,”கோவை மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பொருட்கள் அதிக அளவு வருகிறது. இதை யார் மூலம் எப்படி கடத்தி வருகிறார்கள் என தெரியவில்லை. தற்போது இந்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் மாணவர்கள்.

மேலும் இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. அவர்களைத் தேடி வருகிறோம். மாணவர்கள் தங்கள் வசிக்கும் அறைகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்க கூடாது. வீட்டின் உரிமையாளர்கள் அடிக்கடி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் சோதனை செய்ய வேண்டும்.

தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *