கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்
வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்
இந்த போராட்டத்தில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கமலஹாசன், மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பாளர்கள் சையது உசேன், ஜோதி பிரகாஷ், குமார், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய் துறையினரின் இந்த போராட்டம் காரணமாக தாசில்தார் அலுலவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை, புகார் தொடர்பாக அதிகாரிகளை அணுகி தீர்வு காண முடியாமல் தவித்தனர். பட்டா மாறுதல், நில அளவை, ரேஷன் கார்டு திருத்தம், ரேஷன் கார்டு விநியோகம் போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
