கோவை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதாக இன்று இமெயில் மூலம் மிரட்டல் வந்திருந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாநகர வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உடன் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தனர்.
நீதிமன்ற கூடம் மற்றும் வளாகத்தில் பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது . இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக கோவை நகர் பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
மிரட்டல் கும்பல் டார்க் நெட் என்ற கண்டறிய முடியாத இணையதளம் மூலமாக இமெயில் மிரட்டல் விடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கும்பலை கண்டறிய கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரம் முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. தொடர் மிரட்டல் காரணமாக கோவை நகரில் வெடிகுண்டு பீதி நிலவி வருகிறது.
