கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு கண்டறிய புதிய திட்டம் ..
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக விரைவில் தேர்தல் கணக்கு பிரிவு துவக்கப்படவுள்ளது வேட்பாளர்கள் 7 நாளுக்கு ஒரு முறை செலவு கணக்கு சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது சில வேட்பாளர்கள், செலவு கணக்கு தாக்கல் செய்த போது சில செலவுகளுக்கான ஆதாரங்களை ஒப்படைக்கவில்லை. வீடியோ ஆதாரம் காட்டி கணக்கு கேட்ட போதும் அதற்கு நாங்கள் எந்த தொகையும் வழங்கவில்லை என கட்சி வேட்பாளர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் செலவு கணக்கு சரிபார்ப்பு இழுபறியாகவே இருந்தது. இந்நிலையில் வரும் தேர்தலில் தேர்தல் கமிஷன் தேர்தல் செலவு கணக்கு பிரிவிற்கு அனுப்பியுள்ள உத்தரவில், “வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது உடன் வரும் கட்சியினர் சாப்பாடு செலவு, வாகன செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் தான் சேர்க்கவேண்டும்.
அவர்கள் மறுத்தாலும் வீடியோ ஆதாரத்தை பார்த்து செலவு விவரங்களை எழுதி வைக்கவேண்டும் . பிரச்சாரம் துவக்கம் முதல் முடியும் வரை செலவு விவரங்களை எழுதி வைத்து கணக்கு காட்டவேண்டும். வேட்பாளர்களை முழுமையாக வீடியோவில் கண்காணிக்கவேண்டும்.
வேட்பாளர்கள் தொடர்பான செய்திகள், பிரச்சாரம். பேஸ்புக், யூடியூப் ஓட்டு கேட்பும் செலவு கணக்கில் வரவேண்டும், ” என தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவு கணக்கு வரவில்லை என காத்திருக்க வேண்டாம். தேர்தல் பிரிவினரே பல செலவுக்கு ‘பில்’ ஆதாரங்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். செலவுகளை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது என கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.
