கோவை வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியது..!
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இதில் சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பை 630 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குப்பை கிடங்கு உள்ளது.
இந்த குப்பை தொடங்கினால் வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் காற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
சமீபத்தில் கோண வாய்க்கால் பாளையம் வெள்ளலூர் பகுதியில் பொதுமக்கள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்திய போது அது மஞ்சள் நிறத்தில் இருப்பது தெரியவந்தது. துர்நாற்றம் வீசும் நுரையுடன் இந்த மஞ்சள் நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குப்பை குவியலில் இருந்து மாசுக்கழிவு நிலத்தடி நீரில் கலந்து விட்டதாகவும் அதனால் போர்வெல் தண்ணீர் நிறம் மாறிவிட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
