செட்டிபாளையத்தில் முறைகேடாக மது விற்ற2 பேர் கைது
திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் மதுக்கரை நிலம்பூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள
டாஸ்மாக் கடை அருகே முட்புதர் மறைவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து
விற்பனை செய்வதாக புகார் வந்தது.
கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சோதனை நடத்தினர்.
மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்த ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள 106 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான பார் உரிமையாளர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
எல் அண்ட் டி பைபாஸ் சாலையின் இணைப்பு சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த நேரம் கடந்து நள்ளிரவு வரை பார் ஊழியர்களால் மது விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் இங்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயனின் அதிரடி நடவடிக்கையால்
இப்பகுதி பொது மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
