தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் ஆய்வு..!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
ஏழு தளங்களில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட வரும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் மற்றும் பொருட்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முதல்வர் போத்தனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். கடந்த 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் கோவை வந்தார். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் கோவையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது .
அவர் தங்கி இருந்த வீடு தான் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது . அதில் காந்தி பயன்படுத்திய பொருட்கள் இன்னும் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை முதல்வர் பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.
முன்னதாக அவர் சுங்கம் பகுதி வழியாக காரில் சென்ற போது நிர்மலா கல்லூரி மாணவிகளை சந்தித்தார். அவர்களிடம் தமிழக அரசின் மாணவர்களுக்கான திட்டங்கள் தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்தார்.
கோவை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ் என்பவரின் எட்டு வயது மகள் வெண்பா உடல் நலக்குறைவால் இறந்தார். இந்த சிறுமி தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
முதல்வர் வருகையை தொடர்ந்து கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
