பெண்களை பாலியல் தொந்தரவு செய்த கோவை 4வது பட்டாலியன் கமாண்டன்ட் கைது
கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில் கமாண்டன்ட் ஆக எஸ்பி அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் அங்கே பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியுள்ளார். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்ட நிலையில் கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் செந்தில்குமார் இன்று கைது செய்யப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரி பாலியல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. செந்தில்குமார் மீது அதிக அளவு பெண்கள் புகார் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
