ரேஷன் அரிசி தரமா…? குத்தூசி போட்டு சோதித்த கலெக்டர்..!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தமிழக நுகர் பொருள் வாணிப கழக குடோனில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு நடத்தினார் . இதில் ரேஷன் அரிசி, பருப்பு ,சர்க்கரை ,பாமாயில் தரம் தொடர்பாக பரிசோதனை செய்தார். தற்போது கடும் குளிர்காலமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா, கெட்டுப் போய் உள்ளதா, செல் பூச்சி தாக்குதல் இருக்கிறதா , உணவுப் பொருள்கள் சரியான முறையில் கையாள்கிறார்களா என கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகை விநியோகம் கடந்த சில நாட்களாக நடந்தது. இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் கூடுதலாக சப்ளை செய்யப்படவில்லை . நேற்று முதல் கடைகளில் ரேஷன் பொருட்கள் சப்ளை நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் தடை இன்றி வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலமாக நேற்று வரை 74 சதவீதம் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு தானியங்கள் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோவை மாவட்ட நுகர்வோர் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் பழனிக்குமார் தெரிவித்தார்.
