சிறுவாணி அணை நீர்மட்டம் 50 சதவீதம் சரிவு குடிநீர் பற்றாக்குறை அபாயம்.. !
கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர், கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோரகிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அணையின் உச்ச பட்ச நீர் மட்டம் 50 அடி. இதில் 44,61 அடி வரை நீர்
தேக்க பராமரிப்பு பணி நடத்தும் கேரள நீர் பாசனத்துறை அணுமதி வழங்கியுள்ளது. உச்ச அளவை எட்டும் முன்
அணையில் இருந்து எந்த முன் அனுமதியும் இன்றி தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாக நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 25.22 அடியாக இருந்தது. குடிநீர் வினியோகம் 60 மில்லியன் லிட்டர் ஆக இருந்தது. அணையிலிருந்து முழு அளவில் அதாவது 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற கேரள அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் நீர் மட்டம் 50 சதவீதம் குறைந்து விட்டதால் நீர் எடுப்பதும் குறைந்து வருகிறது . தற்போது தினமும் நீர் எடுப்பது 41 சதவீதம் குறைந்து விட்டது. வெயில் தாக்கம் அதிகமாகி வருவதால் நீர் எடுப்பது மேலும் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சிறுவாணி சப்ளை பகுதியில் பஞ்சம் ஏற்படும் அபாய சூழல் இருக்கிறது. இதற்கிடையே கோடை மழை பெய்தால் நிலைமை மாறி விடும்.
இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய சிறுவாணி உதவி பொறியாளர் தம்பிராஜ் கூறுகையில், “நீர் தேவையான அளவு இருக்கிறது சிறுவாணி குடிநீர் சப்ளை பகுதிக்கு இப்போதுள்ள நீரை தொடர்ந்து வழங்கி வருகிறோம். வரும் ஜூன் மாதம் தென் மேற்கு பருவ மழை துவங்கும். அதுவரை குடிநீர் சப்ளை செய்யப்படும் வழக்கமாக கோடை காலத்தில் இருக்கும் அளவிற்கு தற்போது நீர் இருப்பு இருக்கிறது. ” என்றார்.
