32 வருஷமா கைவரிசை காட்டிய கில்லாடி கைது..
கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜெப மார்ட்டின் (45). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை. கடந்த 24ம் தேதி இரவு ஜெப மார்ட்டினுக்கு அவரது உறவினர் ஒருவர் சாத்தான்குளத்தில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அன்று இரவு தனது மகள்களை அழைத்து கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 26ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்டு ஜெப மார்ட்டின் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோவில் இருந்த 104 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது,
இதுகுறித்து ஜெப மார்ட்டின் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ஆசிரியை வீட்டின் கதவைத் திறந்து நகைகளை கொள்ளையடித்தது ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கீழக்கரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், வீட்டின் கதவு உடைக்கப்படாமல் கொள்ளை நடைபெற்றதை வைத்து துப்பு துலக்கி குற்றவாளியை பிடித்ததும் தெரியவந்தது. கைதானவரிடம் 80 பவுன் நகைகள் மட்டுமே சிக்கியது. இவர் 93ம் ஆண்டிலிருந்து திருடி வருவதாக தெரிகிறது. கோவை மட்டுமின்றி முப்பை, பெங்களூர் என இவர் திருடாத ஏரியா கிடையாது. கோவையில் கார் டிரைவர் வேலை என சொல்லி பல வீடுகளில் வேட்டையாடியுள்ளார்.
