புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பாராட்டு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஜாக்டோ ஜியோ உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டி ஏ பி எஸ் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருச்சி ரோடு ரெயின்போ பகுதியில் உள்ள கோவை கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் எ.வ வேலு ஆகியோருக்கு நன்றி , பாராட்டு தெரிவித்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மாநில அரசு அலுவலர்கள் தங்களின் கடைசி மாத ஊதியத்தில் ஐம்பது சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என பிரதானமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓய்வூதியம் வழங்க , பணியாளர்களின் பத்து சதவீத பங்களிப்போடு , ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீண்ட காலம் ஓய்வூதிய தொகைக்காக போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
