பாறை வெடியால் பதறுது இரும்பறை..!
மேட்டுப்பாளையம் இரும்பறை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில், “மேட்டுப்பாளையம் இரும்பறை ஓதிமலை செல்லும் வழியில் இரண்டு கல் குவாரி இருக்கிறது. இந்த கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் வெடி வைத்து எடுக்கப்படுகிறது.
நீர் பாதை, வண்டிப்பாதை மறிக்கப்பட்டு கற்களை எடுத்து வருகிறார்கள். பொதுமக்களின் வீடுகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு , தூர இடைவெளி கடை பிடிக்கவில்லை. மிக குறைந்த தூரத்தில் குவாரிகள் இருக்கிறது. அதிக அதிர்வில் வெடி வைப்பதால் வீடுகளின் மீது கற்கள் வந்து விழுகிறது, விவசாய தோட்டங்களிலும் கற்கள் விழுவது வாடிக்கையாகி விட்டது.
கல் குவாரி அருகே உயர் மின் கோபுரம் இருப்பதால் ஆபத்து அதிகமாகி விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த பகுதி மக்கள் வசிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளனர்.
