கோவை மாவட்டத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ” ஒரு நாளில் மட்டும் பல ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விஜய் இருக்கிறார். யாருக்கும் இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக விருப்பமனு பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டு இருக்கிறது.
அதிமுக குறித்து விஜய் யதார்த்த நிலையை பேசியிருக்கிறார். ஒரு தலைமை என்பது தானாக உருவாக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது முழுக்க முழுக்க பாஜகவால் உருவாக்கப்பட்டது. உண்மையான தலைமை டெல்லியில்தான் இருக்கிறது.
பல்வேறு அழுத்தங்களால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் பலரும் இணைகின்றனர். அதிமுகவால் யாரும் அந்த கூட்டணியில் வந்து சேரவில்லை. டெல்லி சொன்னதால் தான் வந்து சேர்ந்து இருக்கின்றனர் என கூறினார்.
செங்கோட்டையன் இல்லாமல் மேற்கு மண்டலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபடுவது குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் அறிக்கைக்கான குழு செங்கோட்டையன் பிரசார குழுவிற்கு பொறுப்பாளராக இருக்கிறார்.
இதுபோல தேவையில்லாமல் பிரச்னைகளை கிளப்ப முயற்சிக்க வேண்டாம் என பதிலளித்தார். தவெக பேனர்களில் செங்கோட்டையன் படம் இடம்பெறாமல் இருப்பது குறித்து கேள்விக்கு, “அதெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. ஒவ்வொரு கமிட்டியிலும் ஒருவர் இருப்பார்கள் அவ்வளவுதான்” என பதிலளித்தார்.
