கோவையில் புதிதாக 302 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்..
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ரவுடிகளின்
பின்னணிகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ரவுடியாக வலம் வந்தவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து ரவுடிகளாக வலம் வருகிறார்களா, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்களா, உயிருடன் உள்ளார்களா திருந்தி வாழ்ந்து வருகிறார்களா போன்ற விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
அப்போது சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறை சென்று வந்து மீண்டும், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.
ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு குறைந்தது 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கோவை மாநகர வடக்கு போலீஸ் சரகத்தில் 122 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 180 பேரும் மொத்தம் 302 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ரவுடிகளை ஒரு போலீஸ்காரர் விதம் கண்காணித்து அறிக்கை அளிப்பார்கள். ஏற்கனவே வடக்கு போலீஸ் சரகத்தில் 594 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 511 பேரும் என 1105 பேர் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனர்.
அதில் வடக்கு போலீஸ் சரகத்தில் 91 பேரும், தெற்கு போலீஸ் சரகத்தில் 67 பேரும் சிறையில் உள்ளனர். வெளியே உள்ள சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் கடந்த 10 ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல், திருந்தி வாழ்பவர்களின் விவரங்களும் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை சில மாதங்களில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுவிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாநகரில் ரவுடிகளின் செயல்பாட்டை கடுக்க முடியும் குற்றச்சம்பவங்களும் குறையும்.
