கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 110 புகார்கள் குவிந்தது…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கும் பணி கடந்த 16ம் தேதியில் இருந்து நடக்கிறது.
பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண். 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷனின் சி விஜில் என்ற செயலி மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
இதில் இன்று மாலை வரை 110 புகார்கள் பெறப்பட்டுள்ளது. முதல் நாளில் 47 புகார்கள் வந்தது. அடுத்தடுத்த நாட்களில் புகார்கள் குறைந்து விட்டது. 17ம் தேதி 31 புகார்கள், 18ம் தேதி 15 புகார்கள், 19ம் தேதி 9 புகார்கள் பெறப்பட்டது. இன்று 4 புகார்கள் கிடைத்தது. இந்த பிரிவில் 10 பேர் பணியாற்றி வருகின்றனர்.
போஸ்டர் பேனர் தொடர்பான புகார்களும் அரிதாகி விட்டது. பணம், பரிசு பொருட்கள் தொடர்பாக 25 புகார்கள் பெறப்பட்டது. 7 இடங்களில் பணம் பதுக்கி தருகிறார்கள் என புகார் பெறப்பட்டிருந்தது. 18 பகுதிகளில் பணம், பரிசு பொருட்கள் தொடர்பாக டோக்கன் தருகிறார்கள் என புகார் வந்தது,
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், “பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை செய்கிறார்கள். இதன் காரணமாக இலவச தொலைபேசி எண், சி விஜில் செயலியில் புகார்கள் குறைந்து விட்டது. மேலும் இனி மேல் தான் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய போகிறார்கள்.
பணம், பொருட்கள் கொடுத்து விட்டார்களா, பதுக்கி இருக்கிறார்களா என சரியாக தெரியாத நிலையிருக்கிறது. சி விஜில் செயலியை தயக்கமின்றி பயன்படுத்த கோரிக்கை விடுத்திருக்கிறோம் வரும் நாட்களில் புகார்கள் அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.
