கோவையில் 32 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி…
பைல் படம்..
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ராஜு (62). இவர், தங்க நகை தொழில் செய்து வருகிறார்.
ராஜு தங்க நகைகளை கோவை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வது வழக்கம். அதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தங்க நகைகளை விற்பனை செய்ய தனது தொழில் கூட்டாளிகளான சந்தோஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 335 கிராம் தங்க நகைகளுடன் கோவை வந்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம், டிபி ரோட்டில் அவரை சந்திக்க வருவதாக கூறியிருந்த நகை வியாபாரிக்காக காத்திருந்தார். அப்போது, காரில் 2 பேர் வந்தனர். அவர்கள் ராஜுவிடம் தாங்கள், தங்க நகைகளை வாங்க வந்திருப்பதாவுகம், தங்களது பெயர் ரவீந்திரன் மற்றும் தியாகராஜன் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பி ராஜு தன்னிடம் இருந்த தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து விட்டு உடனடியாக பணம் தருவதாகக் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் பணத்தை தராமல் நகைகளுடன் திடீரென மாயமாகி விட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜு மற்றும் அவருடன் வந்த சந்தோஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை தேடினர்.
ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஒரு வருடம் கழித்து ராஜு நேற்று ஆர்எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை மோசடி செய்த ரவீந்திரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் யார் ராஜு ஒரு வருடம் கழித்து புகார் அளிக்க காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
