கோவை திமுக நிர்வாகி பதவி ராஜினாமா..!
கோவை திருமலையம்பாளையம் திமுக நிர்வாகி ரமேஷ் குமார் திமுக பொதுச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; நான் திருமலையம்பாளையம் பேரூர்கழகத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக கழகப்பணி செய்துவருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேரூர்கழக இளைஞரணி அமைப்பாளராக திறம்பட செயலாற்றி பல இன்னல்களை சந்தித்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய பிரதிநிதியாக கழகம் அளித்த அனைத்து பணிகளையும் செய்துவருகிறேன். கடந்த 6 தேர்தல்களில் பாகமுகவராகவும், வாக்கு எண்ணிக்கை முகவராகவும் செயல்பட்டுள்ளேன். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் தொடர்ந்து மக்கள் பணிகள் செய்துவருகிறேன்..
தற்போது கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி பாகம் எண்295 பாகமுகவராக கழகம் இன்று வரை ஒப்படைத்த தேர்தல்பணிகளை பூர்த்திசெய்துள்ளேன்.
மிகப்பெரும் ஜனநாயகக் கட்சியான திமுகவில் தற்போது அனைத்து பொறுப்புகளும் கட்சித்தேர்தலின்றி நியமனமுறையிலும் சாதிய அடிப்படையிலும் விரும்பியவர்களை புதிய பொறுப்பாளராக நியமிப்பதும், கேள்விகேட்கும் செயல்பாட்டாளர்களை பொறுப்பிலிருந்து நீக்குவதும், மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
“இப்படிப்பட்ட கழகப் பொறுப்புகளே வேண்டாம், தொடர்ந்து கழக உறுப்பினராக மட்டுமே செயல்படலாம்” என முடிவுசெய்துள்ளேன். ஆதலால் தற்போது கிணத்துகடவு சட்டமன்ற தொகுதி 295இன் பாகமுகவர் மற்றும் கழக ஒன்றியபிரதிநிதி ஆகிய பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.
