கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இரண்டாக பிரிப்பு: 2 உதவி இயக்குனர் நியமனம்
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இந்த ஊராட்சிகளின் நிர்வாகம் ஊராட்சி உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.
திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் நிதி மேலாண்மை போன்றவை தணிக்கை உதவி இயக்குனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது கோவை மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஊராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்கள் என்றிருந்தது . இந்த நிலைமை மாறி இப்போது 6 ஒன்றியங்கள் 114 என மாற்றப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மதுக்கரை, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளுக்காக கோவை கிழக்கு ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் என புதிய பதவி உருவாக்கப்பட்டது.
இதே போல் மேட்டுப்பாளையம் ,பெரியநாயக்கன்பாளையம் , அன்னூர் , எஸ் எஸ் குளம், தொண்டாமுத்தூர், சூலூர் ஒன்றியங்களை ஒருங்கிணைத்து கோவை மேற்கு ஊராட்சி மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் என்ற மற்றொரு பதவி உருவாக்கப்பட்டது.
கோவை மேற்கு ஊராட்சி மற்றும் தணிக்கை துறை உதவி இயக்குனராக செந்தில் வேல் நியமிக்கப்பட்டார். கோவை கிழக்கு பகுதி ஊராட்சிகள் மற்றும் தணிக்கை துறை உதவி இயக்குனராக பாலசுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டார்.
கோவை ஊராட்சி உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதே போல் கோவை ஊராட்சி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் பஷீர் அகமது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பணியிடமாற்றப் செய்யப்படுவது வழக்கமான ஒன்று . ஆனால் தற்போது அதிகாரிகளின் பணியிடமும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் எல்லை அதிக தூரத்தில் இருப்பதாலும் பணிகளை எளிதாக மேற்பார்வை செய்து தீர்வு காணும் வகையில் மாவட்ட ஊராட்சி நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி உதவி இயக்குனர் அதிகாரத்தில் இருந்த சில திட்டப் பணிகள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு ( ஊராட்சிகள்) மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாற்றம் ஊராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
