கோவையில் டெமோ மெஷினில் பல ஆயிரம் ஓட்டுப் பதிவு…!
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம். சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.
இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது.
இதில் பயன்படுத்தும் நிலையில் 15,117 மெசின்கள் இருப்பதும், பழுதான நிலையில் 397 மெசின்கள் இருப்பதும் தெரியவந்தது. இவை அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் நல்ல நிலையில் உள்ள 300 மெசின்களை பயிற்சிக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த மெசின்கள் ஒரு தொகுதிக்கு 25 முதல் 30 மெசின்கள் என பயிற்சிக்காக தரப்பட்டது. பொது இடங்களில் வைத்து, ஓட்டு போட அதிகாரிகள் பயிற்சி தர இந்த மெசின்கள் ஒப்படைக்கப்பட்டது. பட்டனை அழுத்துவது, விவி பேட் கருவியில் சின்னம் வருகிறதா என பார்ப்பது, பீப் சத்தம் கேட்கிறதா. கவுண்டிங் மெசின் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்காளர்கள் பார்க்க முடியும் .
பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், முக்கிய இடங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஓட்டு மெசின்களை பயிற்சிக்காக வைத்து ‘டெமோ’ காட்டினர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக மக்கள் ஓட்டு போட பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மெசின்கள் மூலமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்களர்கள் பட்டனை அழுத்தி ஓட்டு பதிவு செய்தனர். இந்த ஓட்டு பதிவு விவரங்கள் ஆதாரங்களுடன் விரைவில் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
