கஞ்சா வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் (43) என்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்ததில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் .
இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவில் அறிவுச்செல்வம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ராஜலிங்கம் குற்றவாளி அறிவுச்செல்வத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும், ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
