கோவையில் இன்ஸ்டா மோகம் : மாயமான 4 சிறுமிகள் மீட்பு…
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்கள் வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் நேற்று இரவு மாயமானதாக தெரியவந்தது . பதறிப்போன பெற்றோர்கள் இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர்.
12 வயதான சிறுமிகள் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவர்களை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடிய போது
சிறுமிகள் நான்கு பேரும் போத்தனூர் ரயில் நிலையம் நோக்கி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது சென்னையில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பிரபலமான 26 வயது மோனாலிசா என்பவரின்
ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை நான்கு சிறுமிகளும் அடிக்கடி பார்த்து வந்துள்ளது தெரிய வந்தது. அந்த பெண்ணுக்கு இவர்கள் ரசிகர்களாக இருந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய சிறுமிகள் உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது எனக் கூறியுள்ளனர் .
இந்த நிலையில் அந்த பெண் அழைத்ததன் பேரில் இந்த நான்கு பேரும் சென்னை புறப்பட்டு செல்ல முயன்றதாக தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக போலீசார் சென்னையில் உள்ள அந்த youtube பெண்ணிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமிகள் திடீரென மாயமான விவகாரம் கோவை நகரில் பரபரப்பு ஏற்படுத்தியது.
