பனிப்புயலால் கோவை வெள்ளிங்கிரி மலை ஏற தடை…!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. 7 மலை ஏறி கிரி மலை தரிசனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. வெள்ளிங்கிரி மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் மழை அதிகமாக பெய்தது. இரவு நேரங்களில் பனிமூட்டம் மற்றும் குளிர் காற்று வீச்சு காணப்படுகிறது. இதன் காரணமாக மலைப்பாதை தெரியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

வழி தெரியாமல் பக்தர்கள் அபாய கரமான அடர் வனத்திற்கு சென்று விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணி செய்து வந்தனர். 6 மற்றும் 7வது மலையில் பனிப்புயல் வீசுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று முதல் மலை ஏறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீதோசன நிலை மாற்றத்திற்கு பின்பு மீண்டும் மலை ஏற அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மலை ஏற்றம் தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வெள்ளிங்கிரி மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *