கோவை குள வாய்க்கால் சீரமைப்பு பணிகள்… ஆய்வு செய்த கலெக்டர்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மழைக் காலங்களில் நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி சாலை நெசவாளர் காலனி பட்டணம் இட்டேரி பகுதியில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில், மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 2.3 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கோவை கலெக்டர் பவன்குமார்,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செல்வசிந்தாமணி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரியகுளம் செல்லும் ராஜவாய்க்காலில் சுமார் 1.7 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிடப்பட்டது.
