liquor issue: டாஸ்மாக் சரக்குக்கு பில் ரசீது தருவாங்களா…
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு பில்லிங் மெசின் மூலமாக ரசீது வழங்காமல் இருப்பதே முறைகேடு தொடர முக்கிய காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வாங்குவதாக புகார் பெறப்பட்டது. பல இடங்களில் மதுபானம் வாங்குவோர் கூடுதல் தொகை தர மறுத்தால் மதுபாட்டில்களை விற்பனையாளர்கள் தர மறுப்பதாக தெரியவந்தது. மதுபாட்டில்கள் விற்பனையில் பெரும் மோசடி நடக்கிறது. கூடுதல் தொகை விவகாரத்தை தவிர்க்க பில் வழங்கும் திட்டம் சென்னை, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், கோவை
உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாக்கப்பட்டது. மதுபாட்டில்களுக்கு உரிய தொகையை தரலாம். கூடுதலாக 10 ரூபாய், 20 ரூபாய் கேட்டால் அது தொடர்பாக புகார் தரலாம். பில் ரசீது கேட்டு வாங்கி ஆதாரத்துடன் புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறலாக்கும் போது கையடக்க கருவிகள் வழங்கப்பட்டது. இப்போது இதில் பெரும்பாலான கருவிகள் இயங்கவில்லை என முடக்கி போட்டு விட்டார்கள். சில கடைகளில் கருவிகள் இயங்கினாலும் பணத்தை வாங்கி ஊழியர்கள் ஸ்கேன் செய்து விடுகிறார்கள்.
கூகுள் பே மூலமாக பணம் அனுப்பினால் அதை ஏற்பதில்லை. மது பாட்டில்களின் பார் கோட் அடங்கிய சீல் பதிவு செய்தால் அதில் மதுபாட்டில் பிராண்ட் எந்த தயாரிப்பு நிறுவனம், உற்பத்தி தேதி விலை குறித்த விவரங்கள் வந்து விடும். அந்த பில் ரசீதை வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் தர வேண்டும். ஏன் தரவில்லை என வாடிக்கையாளர்கள் கேட்பதில்லை, சிலர் கேட்டாலும் கடை ஊழியர்கள் வாங்கி என்ன செய்ய போறீங்க என மிரட்டும் தொணியில் கூறி அனுப்பி விடுகிறார்கள்.
பில் ரசீது போட்டு மதுபாட்டில்களை எவ்வளவு பாட்டில்கள் வேண்டுமானாலும் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் சொல்லும் மது பாட்டில்களுக்கு மட்டும் பில் போடலாம். மது பாட்டில்களை பில் போட்ட பின்னர் திரும்ப பெற இயலாது. எனவே உறுதி செய்த பின்னரே பில் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மது பாட்டில் கூடுதல் தொகை குறித்து என்ன பேசினாலும் அது எடுபடாது,
அதற்கு பில் ரசீது இருந்தால் மட்டுமே கூடுதல் தொகை பெற்றதிற்கு ஆதாரம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே தான் டாஸ்மாக் நிர்வாகம், என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, ரசீது மட்டும் கொடுத்து மாட்டிங்காதீங்க என எச்சரித்து விட்டதாம். இதன் காரணமாக, எந்த பிரச்னை வந்தாலும் அசராமல் கூடுதலாக 10, 20 ரூபாய் என வசூல் வேட்டை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை காலத்திலும், கையடக்க பில் மெசின் இருந்தும் இப்படி பணம் சுருட்டுவது டாஸ்மாக்கில் தான் நடக்கிறது. தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்க போவதாக கூறி லஞ்ச வேட்டையை வேடிக்கை பார்க்கிறது. பத்திர பதிவுத்துறையில் மொத்தமாக ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தவேண்டும்.
அப்போது தான் 10 ரூபாய் வசூல் பின்னணியில் உள்ள அதிகாரிகள் உள்பட ‘மற்றும் பலர்’ குறித்த ஆதாரங்கள் வெளியாகும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
