காலி மது பாட்டில் வாங்க மாட்டோம்… டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் கடந்த 1.04.2023ம் தேதி முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
இதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திற்கு பலமுறை சுட்டி காட்டியும், தீர்வு காணாமல் டாஸ்மாக் நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பிளமேடு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன் நேற்று ஊழியர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு போதிய ஊழியர்களை நியமிக்கவில்லை கடைகளில் கூடுதல் இட வசதி ஏற்படுத்தவில்லை அனைத்து மது பாட்டில்களிலும் 100 சதவீதம் இபிசி (EBC) ஸ்டிக்கர் ஓட்டி அனுப்பவில்லை.
10 ரூபாய் சில்லரை தட்டுப்பாடு உள்ளது. இதனை போக்கிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. Railtel நிறுவனம் Frnd to End Hand Device கருவியை வழங்கி உள்ளது. இது அதிக வியாபாரம் ஆகக்கூடிய நேரத்தில் சரிவர இயங்குவதில்லை. இதனை திரும்ப பெற்று புதிய கருவியை கூடுதலாக வழங்க வேண்டும்.நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி காலி பாட்டில் திரும்ப பெரும் கிட்டப்பணியை அவுட்சோர்சிங் மூலம் அமுல்படுத்த வேண்டும்.
இந்த நிலையில் நிர்வாகம், அவசர கதியில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெற புதிய மென்பொருளை உருவாக்கி, எவ்வித பயிற்சியுமின்றியும், போதிய அளவு E2E Device இல்லாமல் கோவை வடக்கு மற்றும் தெற்கு கடைகளில் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டது சரியான நிர்வாக நடவடிக்கையாக அமையாது.
இது ஏற்கனவே கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தொழிற்தகராறு சட்டம் 9எ-க்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையிலும் புதிய அரசு அமைய உள்ள நிலையிலும், டாஸ்மாக் நிர்வாகம் தன்னிச்சையாக ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது தொழில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
எனவே தாங்கள் காலி பாட்டில்களுக்கான ஸ்கேனிங் செய்யும் பணியை ஊழியர்களிடம் திணிப்பதை கைவிட்டு, இத்திட்டம் தொடர்பான வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.
