கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஆவணங்கள் பொருட்கள் குவிப்பு…!
கோவை மாவட்டத்தில் 3563 வாக்கு சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க உள்ளது.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட வகையான தேர்தல் ஆவணங்கள் , ரகசிய பேப்பர் ,சீல், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு சென்னை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து மூன்று லாரிகளில் 34 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வந்து சேர்ந்தது.
வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் மறைவாக நிற்பதற்காக பிளாஸ்டிக் போர்டு ,மறைவு பகுதி மற்றும் பல்வேறு பேப்பர், சீல் மற்றும் பல்வேறு பொருட்கள் போட்டு வைப்பதற்கான பிளாஸ்டிக் டப்பா ஓட்டு மிஷின்களில் பயன்படுத்தக்கூடிய பேப்பர் மற்றும் ஆவணங்கள் ஸ்டேஷனரி பொருட்கள் வந்து சேர்ந்தது.
இவற்றை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அடுக்கும் பணி விடிய விடிய தொடர்ந்து நடந்து வருகிறது. நாளை காலை கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ,தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு , சிங்காநல்லூர், கிணத்துக்கடவு , வால்பாறை, பொள்ளாச்சி என பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் இந்த பொருட்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். அங்கே தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கான மேஜைகளில் மறைவு பகுதி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் பொருத்தி வைக்கப்படும். நாளையும் மேலும் கூடுதலாக பல்வேறு ஆவணங்கள் பெறப்பட உள்ளது.
