கோவையில் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் ஒரு வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று மதியம் இந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்க முடியாது.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு செல்லும்படி கூறினர். இதன்பின்னர் பொதுமக்கள் சிறிது நேரம் முற்றுகையிட்டு காத்திருந்தவர்கள் அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டு சென்றனர் .
அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்களது பகுதியில் ஏராளமான கர்ப்பிணிகள், வயதானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே வேறு இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
