கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனை: டிபன் பாக்ஸ், பாத்திரங்கள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இன்று கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆதாரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 28 டிபன் பாக்ஸ், 19 சில்வர் டிரம், 24 மற்றும் ஒரு வகையான டிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்களை வியாபாரத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 41,600 ரூபாய். நேற்று நடந்த சோதனையில் மாவட்ட அளவில் 23.36 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
