வெளியூர் காரர்கள் இருக்காங்களா… கோவையில் அதிரடி சோதனை
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ், சர்வீஸ் அபார்ட்மெண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
|திருமண மண்டபம், பார்ட்டி ஹால் மற்றும் பொது இடங்களில் கட்சியினர் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் தங்கி இருக்கக் கூடாது. கூட்டம் கூடி பேசக்கூடாது. தேர்தல் தொடர்பான ஆலோசனை, ஓட்டு சேகரிப்பு நடத்த கூடாது என எச்சரித்துள்ளனர்.
தேர்தல் பணிமனைகளை கலைக்க வேண்டும். அங்கு தேர்தல் தொடர்பான நிகழ்வுகள் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 நாளில், வாக்காளர்களை தங்க வைக்க, ரகசியமாக பணம் தருவதற்காக
அமைக்கப்பட்டிருந்த 17 கூடாரங்களை (பட்டி) தேர்தல் பிரிவினர் அகற்றினர். தேர்தல் பணிக்காக வந்தவர்கள் திரும்ப தங்களது சொந்த ஊர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் நபர்கள் தங்கி தேர்தல் பணியாற்றியதாக தெரிகிறது. இவர்கள் சொந்த ஊர் சென்று விட்டார்களா? என உறுதி செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக விவரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வெளியூர் நபர்கள் மற்றும் விரும்ப தகாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சோதனை நடத்தியுள்ளனர்.
கோவை நகரில் ராஜவீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனைகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். நாளையும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
