கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க… சுயேச்சை வேட்பாளர் நடுரோட்டில் போராட்டம்…!
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோடு ரவுண்டானா முன்பு கோவை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் என்பவர் இன்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனி ஆளாக அவர் ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக செந்தில் பாலாஜி பணத்தை வாரி இறக்கிறார். ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறார். அவருக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டும் என மிரட்டுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது நான் பணம் கொடுத்து ஓட்டு கேட்கவில்லை.
செந்தில் பாலாஜி பணம் கொடுப்பதால் என்னைப் போன்றவர்கள் தேர்தலை நிற்பதால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது. பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எனது கோரிக்கை ஏற்காவிட்டால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். கடந்த 20ஆம் தேதி இது தொடர்பாக நான் கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுத்தேன்.
இந்த மனு மீது எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த லட்சணத்தில் தேர்தல் கமிஷன் இருந்தால் எப்படி மக்கள் ஜனநாயக கடமை செய்வார்கள். இந்த தொகுதியில் தேர்தல் நடந்தால் அது நியாயமாக இருக்காது.
இவர் அவர் தெரிவித்தார்.
மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் போலீசார் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
