Farmers issue: அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யுங்க…! கோவையில் விவசாயிகள் போராட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேலு மந்திராச்சலம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கூறியதாவது: மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தேசிய புள்ளிவிவரத்தின் படி தமிழ்நாட்டில் உள்ள விவசாய குடும்பங்களின் மாதாந்திர வருமானம் சராசரி 11.924 ரூபாய்,
ஆனால் தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சராசரியாக 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு லட்சத்திற்கு மேல் பயிர் கடன் பெற்றுள்ளனர். அரசின் புள்ளி விவரத்தின் படி 92 சதவீத விவசாயிகள் சிறு குறு விவசாயிகளாக உள்ள நிலையில் கூட்டுறவு பயிர் கடன்கள் தள்ளுபடி திட்டத்தில் 90 சதவீத விவசாயிகள் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
150க்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அவற்றில் மத்திய அரசு 21 உணவுப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது, அதிலும் கரும்பு, நெல், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட மூன்று உணவு பொருட்களுக்கு மட்டுமே ஓரளவு கொள்முகல் உள்ளது. எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் 98 சதவீக உணவுப் பொருட்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் கடனை மட்டுமே விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் சராசரியாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தை விற்று கடனை திரும்ப செலுத்தி வருகிறார்கள் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் கடனைத் திரும்ப செலுத்த முடியாததால் பல கோடிக்கணக்கான ரூபாய் அபராத வட்டி தொகையுடன் நிலுவையில் இருந்து வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 01-05-2025 முதல் 28-02-2026 ம் தேதி வரையிலான காலகட்டம் மிகுந்த பாரபட்சமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நஷ்டம் அடைந்ததால் கட்ட முடியாத விவசாயிகள் இந்த கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன் பெற முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி மற்றும் தள்ளுபடி செய்யப்படும் கடன்களை 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் தற்போது காரணமாக காட்டப்படுகிறது.
விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு வழங்கப்படுவது தள்ளுபடி அல்ல ஊக்க தொகை தான். நாங்கள் இதில் பயன் பெற போவதில்லை. விவசாய பொருட்களின் விலை உயர்ந்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவர்.
எனவே அரசு இதை கவனிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைமையை வரும் 30ம் தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி செல்ல போகிறோம்.
