கோவையில் ‘பிட்னஸ் ஊசி’ பயன்படுத்திய ஜிம் பயிற்சியாளர் மர்ம சாவு
கோவை வடமதுரை அருகே உள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). காளப்பட்டி நேரு நகர் பகுதியில் இவர் ஜிம் பயிற்சியாளராக வேலை செய்தார்.
வினோத் குமார் தனது உடலை பிட் ஆக வைத்திருக்க சில புரோட்டின் மற்றும் தாது பொருட்கள் அதிகம் உள்ள ஊசி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இவர் தொடர்ந்து இது போல் செய்வது அறிந்த அவரது குடும்பத்தினர் இயற்கை உணவு எடுத்துக் கொள்ளவும் மருந்து பொருட்களை தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினர்.
ஆனால் அதை வினோத்குமார் கேட்கவில்லை. கடந்த 8ம் தேதி பயிற்சிக்காக வினோத் குமார் தனது ஜிம்மிற்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை . அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது உதவியாளர்கள் அவரைத் தேடி ஜிம் சென்றனர் அங்கே வினோத் குமார் தரையில் அசைவின்றி கிடந்தார் . அவரை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது .இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிட்னஸ் ஊசி மற்றும் புரோட்டின் பவுடர் போன்றவற்றால் சிறுநீரகம் பாதித்து வினோத்குமார் இறந்து விட்டாரா
அல்லது வேறு ஏதாவது போதை பொருட்கள் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் இறந்து விட்டாரா என போலீசார் மருத்துவ அறிக்கை அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
