National Highway கொடுத்த உப்பிலிபாளையம் மேம்பாலத்தை நிராகரித்த NHAI…
கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் சத்தி மெயின் ரோடு இருக்கிறது.
இதில் புளியம்பட்டி முதல் பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி வரை உள்ள என்.எச் 948 என்ற ரோட்டில் 53 கி.மீ தொலைவில் உள்ள பிரதான பாதை தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருந்தது. தற்போது சத்தி மெயின் ரோட்டில் 40 கோடி ரூபாய் செலவில் கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் ரோடு விரிவாகத்திற்கான பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சத்தி மெயின் ரோட்டை மையப்படுத்தி கிழக்கு பைபாஸ் ரோடு அமைப்பதற்கான ஏற்பாடுகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சத்தி மெயின் ரோடு பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லும் பகுதியை சாதாரண நிலையில் மேம்படுத்தினால் சரியாக வராது. அதனை அவினாசி ரோடு போல் மிகச் சிறப்பாக 6 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புளியம்பட்டி முதல் கற்பகம் கல்லூரி வரை உள்ள 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சார்பில் கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம் சீரமைப்பு பணிக்கான திட்டமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேம்பாலம் மிக குறுகலாக இருக்கிறது. இங்கே வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் 16 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிட்டு தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் கிடப்பில் இருக்கிறது. இதை தவிர பழைய உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இருந்து மரக்கடை, என் ஹெச் ரோடு, உக்கடம், சுந்தராபுரம், ஈச்சனாரி என 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்யும் திட்டமும் தனியாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கு மொத்தமாக 60 கோடி ரூபாய் தேவை என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் மதிப்பீடு செய்து ஒப்புதல் பெற காத்திருந்தது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் எதுவும் வழங்காமல் நெடுஞ்சாலை துறை வசம் இருந்த ரோடு முழுவதையும் எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு திட்டத்தில் இழுபறி டென்சனில் இருக்கும் நெடுஞ்சாலை ஆணையம் நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் உப்பிலிபாளையம் மேம்பாலம், ரோடு விரிவாக்க திட்டம் வேண்டாம் எனக்கூறி விட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலை வசம் மீண்டும் இந்த திட்டம் ஒப்படைக்கப்படவுள்ளது.
‘பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம்’ என்ற சினிமா பட வசனம் போல், அங்கே இங்கே மாற்றி மாற்றி திட்டத்தை துவக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள். இப்போது திட்ட மதிப்பீட்டில், வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்கள் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு பிறகு ஒப்புதல் பெற்று டெண்டர் விட்டு உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் ரோடு விரிவாக்க பணிகள் நடத்தப்படவுள்ளது.
