சிங்கப்பெண் படைக்கு கோவையில் 3 குழு…

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று தமிழக முதல்வர் விஜய் சென்னையில் துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை புறநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் ஒரு குழுவும், கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தலா ஒரு குழு என இரண்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் ஒரு பெண் எஸ்.ஐ. தலைமையில், இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3 ரோந்து வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பொது இடங்களிலும், இணைய வழியில் நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி தீவிரமாக நடைபெறும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்தில் சிக்காமல், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *