கோவையில் ஆதாரமற்ற பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை தீவிரம்
கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோடு பகுதியில் நேற்று காரில் சென்ற ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் தொடர்பாக ஆதாரம் கேட்கப்பட்டது . உரிய ஆதாரம் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல் ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வைசாக் என்பவர் காரில் சென்றார். அவர் காரில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் உரிய ஆதாரம் இல்லாமல் இருந்தது. இந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மேலும் பல்வேறு பகுதிகளில் பணம் பரிசுப் பொருள் தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டது. அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்த்தபோது பணம் பரிசுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
சில்வர் தட்டு, வேட்டி ,சேலை, ஹாட் பாக்ஸ் ,பெரிய சில்வர் குண்டா என பல்வேறு பரிசுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில இடங்களில் அடுத்தடுத்து பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். ஸ்மார்ட் வாட்ச் , வெள்ளிப் பொருள் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
