கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை…!
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் . இவர் கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
இவரது மனைவி கோமதி (65). இவர் தனது அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது தாயை பார்ப்பதற்காக லண்டனிலிருந்து கோவை வந்தார். அவர் ராமநாதபுரம் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கே கோமதி கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவரது கழுத்திலிருந்த தங்க நகை , கம்மல் செல்போன் போன்றவை காணாமல் போயிருந்தது.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட திருடர்கள் நகை பணத்திற்காக கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
ஏற்கனவே நஞ்சண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதில் பிரதான குற்றவாளிகளான வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவர் இதுவரை பிடிபடவில்லை. தற்போது அதே பாணியில் இன்னொரு கொலை நடந்திருப்பது கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
