கோவை குளங்கள் குத்தகையில் அபகரிப்பு…
கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது.
இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து குடிசை வாரியத்தின் வசம் ஒப்படைக்கபட்டு, அங்கே 2,350 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீர் தேக்க குளம் என்ற அடையாளத்தை அம்மன் குளம் இழந்து விட்டது. செல்வாம்பதி குளத்தின் வடக்கு கரையில் 2.4 ஏக்கர் நிலம், 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் 25 ஆண்டிற்கு முன் நுகர்பொருள் வாணிப கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை திரும்ப பெற பொதுப்பணித்துறை நிர்வாகம் முடிவு செய்தது.
குத்தகை காலத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில், செல்வாம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம். சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை மேம்பாட்டு பணி செய்வதாக கூறி பொதுப்பணித்துறை நிர்வாகம் வசம் இருந்து கடந்த 2008ம் ஆண்டில் மாநகராட்சி நிர்வாகம் 99 ஆண்டு குத்தகை என்ற பெயரில் வசப்படுத்தியது.
40 ஆண்டிற்கு முன் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட உக்கடம் பஸ் டிப்போவும், வாலாங்குளத்தின் கரையில் 20 ஆண்டிற்கு முன் மின் வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இடமும் மீட்கப்படவில்லை. 3.5 ஏக்கர் பரப்பிலான இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 300 மேகாடி ரூபாய்.
வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில் 1 ஏக்கர் நிலம், சுங்கம் பஸ் டெப்போவின் பிடிக்கு சென்று விட்டது. மேலும் சில பகுதியை பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தி விட்டனர். பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள சிங்காநல்லூர் சூலூர் உள்பட சில குளங்களை பல்வேறு அரசு துறையினர் அலுவலகம் அமைக்க அணுகி வருகின்றனர்.
குத்தகை நிலங்களை திரும்ப பெற அரசு துறையினர் தடை ஏற்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. குறிச்சி குளத்தின் ஒரு பகுதி |அரசு பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறுகையில், “நீராதார குளங்களின் கரைகளில் உள்ள பிற அரசு துறைகளின் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை. மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டிக்காக வாங்கிய குளங்களை மீண்டும் எங்களால் இப்போதைக்கு பெற முடியாது. 99 ஆண்டு காலம் என
நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பணி முடிந்தால் திரும்ப பெற பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் உள்ளது. மின்வாரியம், போக்குவரத்து கழகம், வாணிப கழகத்தினர் இடத்தை காலி செய்ய மறுத்து வருகின்றனர். தற்போது சம்பந்தப்பட்ட நகர்ப்பகுதி குளங்களை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து வருகிறது. குளங்களில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது என தெரிவித்திருக்கிறோம். ” என்றனர்.
