கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
கோவை, மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எண்ணிக்கை மையத்தில் 15 முதல் 22 ரவுண்ட் டேபிள் அமைக்க மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிவறை வசதிகள் 6 அமைக்கும் பணி நடக்கிறது. எண்ணிக்கை மையம், ஸ்டிராங்க் ரூம் தொடர்பான விவரங்கள், வரைபடங்கள் தயாரித்து அதை அந்த வளாகத்தின் முன் ஒட்டி வைக்கும் பணியும் நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை மையங்கள் கடந்த காலங்களில் இருந்ததை போல் அமைக்கப்படவுள்ளது. வேட்பாளர்கள், ஏஜன்டுகள் ஓட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்பட்டு வருகிறது. இதனை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் சுனில்குமார் யாதவ், கிருஷ்ண ஆதித்யா, சஞ்சய் குமார், பிரஞ்சல் யாதவ், யசேந்திர சிங், சுதீர்குமார், கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் போலீஸ் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.
பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஸ்டிராங்க் ரூம் பகுதியில் ஒதுக்கப்பட்ட ஓட்டு மெசின்கள் முறையாக வைக்க வேண்டும். மின் இணைப்பு சரியாக இருக்க வேண்டும். ஸ்டிராங்க் ரூம் மெசின்கள் வைத்து பூட்டிய பின்னர் அதில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டனர்.
