கோவை போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்…!
கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, அவசரகால பதில் நடவடிக்கைகள்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாஸ்டர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (MCCC) நிறுவப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை சரக டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சென்டரில் நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண் அறியும் கேமராக்கள் (ANPR), Dial-100 அவசர உதவி சேவை, சமூக வலைதள கண்காணிப்பு,
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் சைபர் குற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு காவல் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படவுள்ளது. கோவை டிஜி காப், வாட்ஸ் அப் சாட்போட் காவல் உதவி செயலி, ஸ்மார்ட் காவலர் செயலி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டு சேவைகளும் இந்த மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது.
