கோவை மாவட்டத்தில் அதிக தொகை ஷேர் செய்த வங்கி கணக்குகள் பட்டியல் தயார்…
கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தனிநபர் வங்கி கணக்கு மூலமாக அதிகளவுத் தொகை பகிர்வு செய்யப்பட்டது தொடர்பான வங்கியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது;
சமீப நாட்களில் சில வங்கி கணக்குகளில் அதிக தொகை எடுக்கப்பட்டது. சில வங்கி கணக்குகளில் இருந்து பல நூறு பேருக்கு தொகை பகிர்வு செய்யப்பட்டது.
இதில் குறிப்பிட்ட சில வங்கி கணக்குகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக வங்கி நிர்வாகத்தினர் கருதினர். இந்த விவரங்கள் தேர்தல் பிரிவின் கணக்கு அப்சர்வர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சந்தேக வங்கி கணக்கு விவரங்கள் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில்,” மாவட்ட அளவில் பல்வேறு தொழில்கள் செய்பவர்களுக்கு அதிகளவு வங்கி கணக்கு வைத்துள்ளனர். பொது மக்களுக்கு ஒரே நேரத்தில் அதிக தொகை பகிரப்பட்டால் அந்த விவரங்கள் தரப்பட வேண்டும். இந்த பணம் தேர்தல் நோக்கத்திற்காக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது.
எனவே அந்த வங்கி விவரங்களை கேட்டிருக்கிறோம்.
மகளிர் சுய உதவிகுழு, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்பட பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு பல்க் அக்கவுண்ட் மூலமாக பணம் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வகையில் இல்லாமல் வேறு ஏதாவது வகையில் அதிக தொகை பகிரப்பட்டுள்ளதா இதுவரை எந்த பயன்பாட்டிலும் இல்லாமல் திடீரென புதிதாக வங்கி கணக்கு துவக்கி அதிக தொகை கையாளப்பட்டுள்ளதா என கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
சந்தேக அக்கவுண்ட் விவரங்கள் தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. வங்கி நிர்வாகங்கள் தங்களது வங்கி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அக்கவுண்ட் விவரங்களை படிப்படியாக ஒப்படைத்து வருகின்றனர்.” என தெரிவித்தனர்.
