கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் கையேடு விநியோகம்…
கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது.
அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு இன்னும் அச்சடித்து வரவில்லை என தெரியவந்துள்ளது. வரும் 12ம் தேதி கோவைக்கு வாக்காளர் தகவல் சீட்டு வர வாய்ப்புள்ளது.
இவற்றை ஒரு வார காலத்திற்குள் வீடு வீடாக கட்டாயம் வழங்க வேண்டும். இந்த தகவல் சீட்டு அரசியல் கட்சியினர் மூலமாக வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், சுமார் 20 ஆயிரம் பூத் லெவல் ஆபீசர் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் செய்யப்படும்.
இந்த தகவல் சீட்டு வராதவர்கள் சம்பந்தப்பட்ட பூத் லெவல் ஆபீசர்களை அணுகி பெறலாம். இல்லாவிட்டால் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் இருந்து ஓட்டு சாவடி எண், பாகம் எண் தெரிந்து அதை வைத்து ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போடலாம் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் வாக்காளர் தகவல் சீட்டுடன் இந்த முறை வாக்காளர் கையேடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கையேட்டில் வாக்கு சாவடி, வழிகாட்டி பாதை விவரங்கள் இருக்கும் பூத் மேப்பிங் மூலமாக வாக்கு சாவடியை வாக்காளர்கள் அணுகி ஓட்டு போடலாம்.
செல்போன் டெபாசிட் சென்டர்கள் இந்த முறை ஒட்டு சாவடிகளில் அமைக்கப்படும். கூடுதல் வசதிகள் இருப்பதால், ஓட்டு சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் இந்த முறை புதிய அனுபவத்தை சந்திப்பார்கள். தேர்தல் ஓட்டு பதிவு எளிமையாக்க ஏகப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
