ரியல் எஸ்டேட் பிரமுகரை மிரட்டி நகை பறித்த ‘மாயா குரூப்’ கைது
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .
இவரிடம் ரத்தினபுரியை சேர்ந்த பேபி என்கிற மாயா (23 ) என்பவர் நிலம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார் . அப்போது சிவகுமார் பன்னிமடையில் இடம் இருப்பதாக கூறி அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் . அங்கே மனை இடத்தை காட்டியுள்ளார் .
அப்போது மாயா தனக்கு இடம் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பன்னிமடை பொன்னூத்து அம்மன் கோயில் வீதியில் உள்ள இன்னொரு இடத்தை காட்டுவதற்காக சிவகுமார் அழைத்துச் சென்றார் .
அப்போது அங்கே இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் உடன் சேர்ந்து மாயா, சிவகுமாரை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க நகையை பறித்து அவரை தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக சிவக்குமார் தடாகம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகையை பறித்த மாயா மற்றும்
அவரது கூட்டாளிகளான வடவள்ளியை சேர்ந்த மோகனகிருஷ்ணன் (27) மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த கண்ணதாசன் (28 ) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஆறு பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.
